வைத்தியரை காயப்படுத்திய வேட்பாளர்

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், தமது கணவர் கத்தியால் வெட்டியதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா – நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த பெண் வைத்தியர் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படும் வைத்தியரின் கணவர், கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் என பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வைத்தியரின் முதுகு மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியில் காணப்பட்ட இலக்கமொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியததையடுத்து சந்தேகநபரான கணவர் கத்தியால் வெட்டி, அவரை காயப்படுத்தியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்