விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு இந்த சம்பவம் தொடர்பில், அழைக்கப்பட்ட போதும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாக தவறியதன் காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது, பிரதிவாதிகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மில், தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக உள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 19ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்