இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய வருடாந்த ஒப்பந்தத்தில், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தையை மையப்படுத்தி பல்வேறு புதிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை சேர்க்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் வீரர்களுடனான ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் நற்பெயர் மற்றும் வீரர்களின் நற்பெயரைப் பாதுகாத்தல், மன ஒருமைப்பாட்டைப் பேணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அவற்றில்,
- உத்தியோகபூர்வ சந்திப்புகளின் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் காற்சட்டை (Shorts) அல்லது பாதணிகள் (Slippers) அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- போட்டிகள் அல்லது பயிற்சிகளின் போது ‘ஸ்டட்’ (Stud) அல்லது காதணிகள் அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் அணி முகாமையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பணம் செலுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது நற்பெயரை விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- போட்டிகளின் இரகசியங்களைப் பெற்றுக்கொள்ளுதல் அல்லது ஆட்டநிர்ணய சூழ்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்காக வீரர்களைப் பாலியல் ரீதியாகத் தூண்டும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- போட்டித் தொடர்களின் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தமது உத்தியோகபூர்வத் துணையுடன் மாத்திரமே உறவுகளைப் பேண அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பாலியல் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அணியின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிடுவதும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும், என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.