காங்கேசன்துறை-பாண்டிச்சேரி பயணிகள் கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்

தென்னிந்தியாவிற்கும் – காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, காங்கேசன்துறைக்கும்  பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கு இந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்பதீவ யாத்திரைக்கு செல்லும் இலங்கை பக்தர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் படகு சேவை பெரும் நிவாரணமாக அமையும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

ஒரு பயணத்திற்கு ஒரு பயணியிடம் இருந்து சுமார் 60 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும் எனவும், 100 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல முடியும் எனவும் படகு உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.