“நாமே இலங்கையின் நண்பன்” : சாணக்கியனுக்கு சீன தூதரகம் பதில்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதரகம் கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளை பட்டியலிட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை தாம் ஊக்குவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருவதாகவும்,

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாகவும்,

சீனாவின் நிதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தாமதமின்றி தொடர்பு கொண்டதாகவும்,

பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் நாட்டிற்கு பயணம் செய்து வருவதாகவும்,  இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தெரிவித்த கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் உண்மைகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தியுள்ளது

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்  சாணக்கியன், சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல என்று குறிப்பிட்டார்.

உண்மையான நண்பராக இருந்தால், ஏன் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா உதவவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.