அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் மற்றும் அதன் கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி ,ஜூலை 1ஆம் திகதி முதல் வரி வலையை விரிவுபடுத்துதல், வரி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் கடுமையான அமுலாக்க நடவடிக்கைகள் போன்றவற்றை அரசாங்கம் ஒரே நேரத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய வரி மாற்றங்கள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) வரிச் சட்டகத்திற்குள் கொண்டுவரப்படும் எனவும், நிதிச் சேவைகள் அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படும் எனவும், டிஜிட்டல் பொருளாதாரமும் பெறுமதிசேர்வரி முறையின் கீழ் உள்ளடக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒட்டுமொத்த இணக்கப்பாட்டு கடமைகளும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் வெறும் சீர்திருத்தங்கள் அல்ல, மாறாகப் பொருளாதாரத்தை நசுக்கும் ‘பறிப்பு’ (extraction) என அவர் விமர்சித்துள்ளதோடு அதிக வரிகளை விதிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
வணிகங்கள் இயங்குவதற்கும் இடமளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் இறுதியில் வரி விதிக்க எதுவுமே எஞ்சியிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.