பணம் இல்லாததால் உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்
- Advertisement -
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.
அங்கு உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை சீரழித்த, வக்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்பினர் திருட்டு யானையுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்கப்போவதாக தெரிவிக்கின்றர். இதன் ஊடாக அவர்கள் மீண்டும் எழ முயற்சிப்பதாக கூறுகின்றனர், இது பெரும் நகைச்சுவை, இதற்கு மக்கள் இடமளிப்பீர்களா?
- Advertisement -
தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக பெற்றோர் தமது முழுமாத சம்பளத்தையும் செலவழிக்க நேரிட்டுள்ளது, மருத்துவ தேவைகளுக்காக கூடிய தொகை செலவாகின்றது.
மின்கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேரணியூடாக கொழும்புக்கு வந்து பேராட வேண்டி வரும்.
மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் போது, ஜனாதிபதி நாட்டை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். எமது தாய்நாட்டை மொட்டு விற்பனை நிலையமாக மாற்றியுள்ளது என குற்றம் சாட்டினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிரத்தியேக பணியாளர் குழாமின் பிரதானியுமாக செயப்பட்ட W.N.P.விஜயகோண் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -