காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம். சுனித வர்ணசூரிய வழிகாட்டலின் கீழ், போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி திரு. ஆர்.எம்.சி.கே. சாமரநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பின்வரும் காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்டன:
தலைக்கவசம் இல்லாமல் வாகனம் செலுத்தல், இலக்கத் தகடுகள் இன்றி பயணித்தல், உரிய ஆவணங்கள் இன்றி பலரைக் கொண்டு பயணித்தல், வேகக்கட்டுப்பாடுகள் இன்றி வாகனம் செலுத்தல் என்பனவாகும்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும், மோட்டார்சைக்கிள் செலுத்தும் போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாமல் தங்களது பாதுகாப்பையும் பிறரது பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.