அரசியல்வாதிகள் ஏப்பம் விட்ட கடன்தொகையை மக்கள் செலுத்த வேண்டியதில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

இலங்கை நாட்டின் ஊழல் மிக்க அரசியல்வாதிகள் வெளிநாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெற்று ஏப்பம் விட்ட 62 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட பெருந்தொகைப் பணத்தின் கடன் சுமையை கழுதைகள் போல் நாட்டு மக்கள் சுமக்கிறார்கள்.

அவற்றை மக்கள் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என மேதினக் கூட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது.

நாட்டிலுள்ள பல்வேறு தொழிற் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மேதின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் கொழும்பு அல்விஸ் பிளேஸிலுள்ள ஸ்டான்லி ஜேம்ஸ் மைதானத்தில் மேதினத்தன்று இடம்பெற்றது.

நிகழ்வில் வடக்கு கிழக்கு மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்து பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகப் பிரதிகள் காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால் அஹமட் தலைமையில் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்ட அந்த நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணப் பிரதிநிதி நிஹால் அஹமட், நாட்டு மக்களைக் காட்டி பெருந்தொகைப் பணத்தை சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற்ற ஊழல் அரசியல்வாதிகள் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தி விட்டார்கள்.

அதனால் மக்களுக்கு இப்பொழுது சொல்லொண்ணாத் துன்பமும் துயரமும் வறுமையும் தாண்வமாடுகிறது. எனவே, அன்றாடங் காய்ச்சிகளான தொழிலாளர்களின் நாளாந்த உழைப்பில் எண்பது வீதமான உழைப்பு, ஊழல் அரசியல்வாதிகள் பெற்ற கடன் செலுத்துவதற்கான வரிப்பணமாகவே செல்லுகின்றன. இதனை நாம் நிறுத்த வேண்டும். தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இலங்கை மக்களுக்கான பணம் என்று ஊழல்வாதிகளிடம் கடன் வழங்கிய நிதிநிறுவனங்கள் வழங்கிய பவணத்தை அந்த நிறுவனங்கள் மக்களிடமிருந்து அறவிடுவதை நிறுத்த வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணியும் ஐக்கிய தொழிற்சங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கன், உட்பட இன்னும் பல முதன்மை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
தொழிற்சங்கங்களின் மேதினக் கூட்ட நிகழ்வுகளின் தமிழ் அறிவிப்பை பிரபல வானொலி அறிவிப்பாளர் பன்மொழி ஆளுமை சாய் விதுஷா அஜித் தனது கணீர்க் குரலால் தொகுத்து வழங்கினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்