மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 20-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவிச்சக்கரவண்டி பேரணியும், மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்பாக காலை ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பேரணியானது, கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைந்தது.

சமூக விழிப்புணர்வை மையப்படுத்தி நடத்தப்பட்ட இப்பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர் லயன்ஸ் எஸ். மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லயன்ஸ் சடாற்சரராஜா திறம்பட ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் 306 D10 லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் லயன்ஸ் க. லொகேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக துணை ஆளுநர்களான லயன்ஸ் ஹாகீர் அகமட், லயன்ஸ் ரீ.ஆதித்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கழகத்தின் 20 ஆண்டு கால சேவையை நினைவுகூரும் வகையில், மனிதாபிமான அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உலர் உணவுப் பொதிகள் காந்தி பூங்காவில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

லயன்ஸ் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்த ஆண்டு நிறைவு விழாவினைச் சிறப்பித்தனர்.
