‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி,2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அஸ்வெசும நலத்திட்டம், நடப்பு ஆண்டில் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையவுள்ளது.
இதற்கான பயனாளிகளின் விவரங்களை இந்தக் காலப்பகுதியில் அதிகாரிகள் புதுப்பித்து வருகின்றனர்.
இந்த திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 1.6 மில்லியன் பயனாளிகள் நிதியுதவிகளைப் பெற்றிருந்தனர்.
எனினும், தற்காலிக மாறுதல் பிரிவாக வகைப்படுத்தப்பட்டிருந்த நான்காவது பிரிவைச் சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் கடந்த 2025 ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பிரிவைச் சேர்ந்த 425,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளும் நடப்பு ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக கருத்துத் தெரிவிக்கையில்,
“பாதிப்புக்குள்ளாகக்கூடிய மற்றும் தற்காலிக மாறுதல் பிரிவுகளின் கீழ் முன்னர் வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மறுமதிப்பீட்டு செயல்முறையின் பின்னர் அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் அல்லது கடுமையான வறுமையில் வாழ்வது கண்டறியப்பட்டால், மீண்டும் இந்த நிதியுதவிகளைப் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.”எனக் குறிப்பிட்டுள்ளார்.