ரயிலில் மீட்கப்பட்ட சிசு : பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணை உத்தரவு

கடந்த மார்ச் 10 ஆம் திகதி கோட்டை புகையிரத நிலையத்தில் ரயிலில் கைவிடப்பட்ட குழந்தையின் 25 வயது தாயை கைது செய்த போது அவரை அசௌகரியப்படுத்தும் வகையில் விசாரணையில் கடுமையாக நடந்துகொண்டமைக்கு பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பொலிஸ் தலைமையக விசேட புலனாய்வுப் பிரிவிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலின் மலசலக்கூடத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 நாட்களேயான பச்சிளம் சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் அந்த சிசுவின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அச்சிசுவின் தந்தை, பதுளை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து அவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.