அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை : வந்தடைந்தது நெடுந்தீவுக்கு புதிய மின் பிறப்பாக்கி

-யாழ் நிருபர்-

நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக, அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த மின் பிறப்பாக்கியை சுண்ணாகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், அதனை உடனடியாக நெடுந்தீவிற்கு எடுத்துச் சென்று சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசனைகளை துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

நெடுந்தீவில் மின்சார விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கி வினைத்திறன் குறைவடைந்தமையினால் அண்மைய நாட்களாக பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டமையினால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் எடுத்துவரப்பட்டுள்ள அதிசக்தி வலுக் கொண்ட புதிய மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்ட பின்னர் நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற முறையில் தொடர்ச்சியான மின்சாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதாக நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்துடன் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வுப் போக்குடன் செயற்படுமாறும் துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்