மாவீரர் தின வியாபாரிகள் : சர்ச்சை சுவரொட்டி

 

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் ‘மாவீரர் தின வியாபாரிகள்’ என சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒவ்வொரு மாவீரர் தினமும் வியாபாரமாக்கப்பட்டுள்ளதாகவும், மாவீரர்களை வைத்து வியாபாரம் இடம்பெறுவதாகவும் அதற்கு உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாவீரர் தினத்திற்கு என ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பதாக குறித்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லண்டன் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்திற்கு சில கோடிகளை அனுப்பி வைத்துள்ளதாக சுவரொட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பணத்தில் சிறிது அளவு பணத்தை மாவீரர் தினத்திற்கு செலவழித்துவிட்டு மிகுதியை தங்கள் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும் இவ்வாறு மாவீரர் தினத்தை சுட்டி காட்டி ஒவ்வொரு முறையும் வியாபாரம் செய்வதாக அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.