வட்டாரங்களை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் பிரதேச சபையில் நிறைவேற்றம்

 

உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒன்று இன்று புதன்கிழமை காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.

சபையின் மாதாந்திர பொது கூட்டம் இன்று சபையின் தவிசாளர் பாலச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த பிரேரணையினை தவிசாளர் சபையில் முன்வைத்தார்.

இந்த பிரேரணைக்கு, ஈ.பி.டி.பி கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளினது உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அதனையடுத்து பிரேரணை சபையில் தீர்மானமாக்கப்பட்டது.

இந்த தீர்மான அறிக்கையானது, பிரதேச செயலர், உள்ளூராட்சி அமைச்சர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.