அரச காணியில் மரம் வளர்ப்பு திட்டம் : விற்பனை செய்வதற்கும் அனுமதி

-யாழ் நிருபர்-

 

வடக்கில் உள்ள அரச காணிகளில் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பயன் தரு மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு, அவற்றை உரிய காலங்களில் விற்பனை செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

வட மாகாணத்தில் பசுமைத் திட்டத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அரச காணிகளை பெற்ற குடும்பங்கள் மற்றும் பெறக் காத்திருக்கும் குடும்பங்களின் காணிகளிலே இவ்வாறு மரங்கள் நாட்டி வைக்கப்படவுள்ளது.

வடக்கில் ஒரு லட்சத்தி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசகாணி வழங்கப்பட்டுள்ள நிலையில் காணி அற்ற ஏனைய மக்களுக்கும் அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

பசுமை மரத்திட்டத்தின் கீழ் வடக்கில் அரச காணிகளில் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் காணிகளின் வளர்க்கப்படுவதுடன் அதனை பராமரிப்பதற்கான பயிற்சிகளும் ஆலோசனையும் வழங்கப்படும்.

அறுவடையின் போது குறித்த நபர்களின் பெயரில் பரிந்துரைக்கப்பட்ட மரங்களை உரிய விலையில் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் நிரந்தர வாய்ப்புகளை அதிகரித்து கொள்வதற்கு வழி வகுக்கும்.

ஆகவே, மக்களுக்கான பசுமை மர நடுகைத் திட்டத்தை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேசமட்ட குழுக்களுடன் இணைந்து விரைவில் எண்ணி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.