15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

-யாழ் நிருபர்-

15 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட, பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞன் ஒருவரையும், குறித்த சிறுமியையும் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த இளைஞன், 15 வயதுக் காதலியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவாயிருந்தார்.

இந்நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடயம் அச்சுவேலி பொலிஸாரால், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வலைவீசி வந்த காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், சிறுமியையும் குறித்த இளைஞனையும் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தவுள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.