நோயாளியை பார்வையிட சென்றவர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்றவர் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பாக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
நவம்பர் 26 ஆம் திகதி மதியம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக இருவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள், வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சில பார்வையாளர்களை அனுமதித்தீர்களே என தெரிவித்து நோயாளியை பார்க்கச் சென்றவர் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஒன்றுகூடிய வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த தபாலக ஊழியர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நோயாளரை பார்வையிடுவதற்கு வந்தவரே முதலில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தலைக்கவசத்தினால் (ஹெல்மெட்) தாக்கியுள்ளார். அதன் பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை தாக்கியுள்ளனர். அத்துடன் ஹெல்மெட்டினால் தாக்கியவர் அந்த நேரம் போதையில் இருந்ததாக அறிய முடிகிறது.
தாக்குதலில் காயமடைந்த, நோயாளரை பார்வையிட வந்தவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை பாதுகாப்பு உத்தியோகத்தரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
நோயாளரை பார்வையிடுவதற்கு வருபவர்கள் வெற்றிலையோ மதுபானமோ பாவித்துவிட்டு வரக்கூடாது. அத்துடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இவ்வாறு தாக்குதலை மேற்கொள்ள முடியாது. அத்துடன் இரு தரப்பும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்தான சி.சி.டி.வி ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம், என்றார்.
இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.