இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்-

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் டிசம்பர் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை பகல் பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பன்னிரெண்டு மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரால் பருத்தித்துறை நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.