இந்திய மீனவர்கள் 24 பேருக்கும் விளக்கமறியல்

-யாழ் நிருபர்-

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரையும் டிசம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த 24 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த 24 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் .

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது.