திருகோணமலையில் மாட்டுடன் மோதி இளைஞனின் இரு கைகளும் உடைந்தது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மொரவெவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வீதியால் வந்த மாட்டுடன் மோதியதில், ஒரு இளைஞரின் இரு கைகளும் உடைந்துள்ளதுடன் மற்றைய இளைஞரும் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த இளைஞர் ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு படுகாயம் அடைந்த இளைஞர்கள் மஹதிவுல்வெவ முதலாம் கண்டத்தில் வசித்து வரும் 30 மற்றும் 35 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

மொரவெவ பிரதேசத்தில் வீதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் நிற்பதினால் இவ்விபத்து இடம்பெற்று வருவதாகவும் பிரதேச சபையினர் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்