ஆமைக்கறி வறுவலுக்காக மனைவியை அடித்தே கொன்ற கணவர்

ஆமைக்கறி சமைத்ததில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருகையில்

இந்தியாவின் ஒடிசா மாநிலம் சம்பால்பூர் மாவட்டத்தின் ரவுத்பாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன் பாடிங். இவர் தனது 35 வயது மனைவி சாவித்ரியுடன் வசித்துவந்தார். ஒரு மாதத்திற்கு முன்னர் மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் ரஞ்சன் மனைவியிடம் ஆமையை கொண்டு கறி வறுத்து தரும்படி கேட்டுள்ளார். மனைவி சாவித்ரி சமைத்து வந்து கணவருக்கு பரிமாறியுள்ளார். அப்போது, உணவை சாப்பிட்ட கணவர் ஆமைக் கறி வறுவல் ஏன் கருகிவிட்டது என ஆத்திரமடைந்துள்ளார்.

இருவருக்கு இது வாக்குவாதமான நிலையில், போதையில் இருந்த ரஞ்சன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். மனைவி மயங்கி விழுந்த நிலையில், அப்படியே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார் ரஞ்சன். பின்னர் போதை தெளிந்து மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் தாக்கியதில் மனைவி இறந்த விஷயம் தெரியவந்துள்ளது.

இந்த கொலையை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டமிட்ட அவர் மனைவியின் உடலை தூக்கி வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.பின்னர் உற்றார் உறவினர் ஊர்காரர்களிடம் தனது மனைவி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக பொய் பரப்பியுள்ளார்.

இந்நிலையில் மருமகனின் மீது சந்தேகம் கொண்ட சாவித்திரியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், ரஞ்சன் வீட்டிற்கு காவல்துறை சென்றது. தப்பியோட நினைத்த ரஞ்சனை மடிக்க பிடித்த பொலிஸார், அதட்டி விசாரித்துள்ளனர். அப்போது ரஞ்சன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ரஞ்சன் வீட்டு பின்புறத்தில் இருந்து மனைவியின் உடலை தோண்டி எடுத்த பொலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்கா அனுப்பிவைத்தனர். தொடர்ந்து காவல்துறை ரஞ்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.