காணி மோசடி : சட்டத்தரணி உட்பட ஐவர் கைது

-யாழ் நிருபர்-

சட்டவிரோதமான முறையில், ஆறு பரப்புக் காணிக்கு பொய்யான உறுதி முடித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டத்தரணி ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 1988ம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் உயிரிழந்த நபர் குறித்த காணியை 2021ம் ஆண்டு விற்பனை செய்துள்ளதாக காணி உறுதி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணியை வாங்கியவர் மற்றும் சாட்சி கையொப்பமிட்டவர்கள் என நால்வர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதாகியிருந்த நிலையில், அதற்கு உடந்தையாக இருந்து பதிவுகளை மேற்கொண்ட சட்டத்தரணி நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் காணி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.