இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானமானது கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை வருமானமாக இலங்கைக்கு 1,360 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும், 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் ஊடாக 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியிருந்தது.
அதற்கமைய இந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானம் 11.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டின் மே மாதத்தில் சுற்றுலா வருமானம் 155.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் அதேவேளை, கடந்த ஆண்டின் மே மாதத்தில் அது 164.1 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இதேவேளை, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்பலாக இலங்கைக்குக் கிடைத்த தொகை 3,909.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணவனுப்பல் வருமானம் 3,102.2 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது.
அதற்கமைய இந்த ஆண்டில் வெளிநாட்டுப் பணப் பணவனுப்பல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.