பொலன்னறுவை, தீப உயன பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 59 வயதான போலி வைத்தியர் ஒருவர், பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், பன்னலவைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹிங்குரகொட மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் பணிபுரியும் வைத்தியர் எனத் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து மருத்துவக் குழாய் (Stethoscope), மருத்துவச் சீருடை மற்றும் போலி அடையாள அட்டை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே பொரளை, கண்டி, மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில் பல்வேறு குற்றங்களுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இவர் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.