எதிர்வரும் மாதம் முதல் இலங்கையின் வானிலையில் ‘எல் நினோ’ (El Nino) காலநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த நிலைமையானது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக் காலநிலையின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் முன்னதாக எல் நினோ நிலைமை உருவாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் பல்வேறு கட்டங்களாக சுமார் 11 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வானிலை நிலவரங்களில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, பேரிடர் மேலாண்மை மையம், விவசாயத் திணைக்களம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை என முக்கிய அமைப்புகள் உட்பட 20 பிரதான துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்