மட்டக்களப்பில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே கைகலப்பு: இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு  தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகில் 11 மணியளவில் பிரயாணிகளை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து வண்டி தரித்து நின்றுள்ளது.

இதன் போது பின்னால் கல்முனை நோக்கி பிரயாணித்த மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி பேருந்து தரிப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக அங்கு தரித்து நின்ற தனியார் பேருந்தை முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த தனியார் பேருந்து சாரதி பேருந்தில் இருந்து இறங்கி இலங்கை அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் சாரதி மற்றும் நடத்துனர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து தனியார் பேருந்து சாரதி பேருந்துடன் தப்பி ஓடியதையடுத்து இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் பேருந்து நடத்துனரை கைது செய்துள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்