பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் நாளை திங்கட்கிழமை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது.
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் உயிர்கள் பறிபோவதையும், இலட்சக்கணக்கான மக்கள் காயங்கள் மற்றும் ஊனமுறுவதையும் கருத்திற்கொண்டு, பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விபத்துத் தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களில் கணிசமான சதவீதமானோர் அனர்த்தங்கள் காரணமாகவே சிகிச்சை பெற்று வருவதுடன், அவற்றில் தவறி விழுதல், வீதி விபத்துக்கள், பணியிட விபத்துக்கள், நீரில் மூழ்குதல் முதன்மை பெற்றுள்ளன.
சுகாதார சேவைக்கு மட்டுமன்றி, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.