மட்டக்களப்பு வெல்லாவெளியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் பகுதியில் உள்ள வீதியில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த நாகமணி பூமலர் (60 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பெரியகல்லாறு பகுதியில் இருந்து நாற்பதாம் கிராமம் பகுதிக்கு தனது சகோதரரை தேடிச் சென்றுள்ளார். நேற்று வியாழக்கிழமை வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிச் சென்ற நிலையில் நாற்பதாம் கிராமம் மயான வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமாகாதவர் என்றும் நீண்ட காலமாக மனநிலை சரியில்லாதவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.