மட்டக்களப்பு-மயிலம்பாவெளியில் அகிம்சா சமூக நிறுவனத்தினால் வீடு வழங்கி வைப்பு

 

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்தில் மிகவும் வரிய ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜாவின் முயற்சியால், கனடா நாட்டில் இயங்கிவரும் அமைப்பான மணிகண்டன் அறக்கட்டளை நிதிப்பங்களிப்பில், ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் குறித்த வீடானது அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தொகையில் இவ் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், மிகவும் நேர்த்தியானதும், வசதியான முறையிலும் குறித்த வீடு மிகவும் குறுகிய நாட்களுக்குள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள 54வது இவ் வீட்டினை உத்தியோக பூர்வமாக வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இன்று காலை இடம்பெற்றது.

அமிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் வி.விஜயராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், செங்கலடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரன், அகிம்சா சமூக நிறுவனத்தின் செயலாளர் ராஜ்மோகன், ஏறாவூர் பொலிஸ் அதிகாரி, விபுலானந்தபுரம் கிராமசேவையாளர் உள்ளிட்ட கிராம மக்களும் கலந்துகொண்டருந்தனர்.

நிகழ்வில் அதிதிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.