தாயின் கவனயீனம் : தீயில் கருகி உயிரிழந்த 3 மாத கைக்குழந்தை

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட,  அம்பத்தளை பகுதியைச் சேர்ந்த 3 மாத கைக்குழந்தையொன்று வீட்டில் இடம்பெற்ற விபத்தில் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைக்குழந்தையும், குழந்தையின் 5 வயது சகோதரியும் மாத்திரம் வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தைகளின் தாயார் நீர் கொதிக்க வைக்கும் வோட்டர் ஹீட்டரை இணைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அவ்வேளை வோட்டர் ஹீட்டர் தீப்பிடித்து, குழந்தை தூங்கிக் கொண்டிருந்த படுக்கைக்கும் பரவியது.

இதனை அவதானித்த உயிரிழந்த குழந்தையின் 5 வயது சகோதரி  சென்று தாயாரை அழைத்துள்ளார். தாய் வீட்டிற்கு வந்து பார்த்த போது 3 மாத கைக்குழந்தை ஸ்தலத்திலேயே கருகி உயிரிழந்திருந்தது.

மேலும், பணம் செலுத்தாததால் குறித்த வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அருகிலுள்ள வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் வீட்டிற்கு மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.