14 பவுண் தங்க நகைகளுடன் நால்வர் கைது

-யாழ் நிருபர்-

ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் திகதி குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றிருந்த சமயம், வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை மற்றும் ரொக்கப்பணம் என்பன திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, நேற்று புதன்கிழமை குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் SI விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்கநகை மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம் பெற்று வரும் நிலையில், விசாரணையின் பின்னர், இன்று வியாழக்கிழமை சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.