80 இலட்சம் ரூபாய்க்கு புத்தர் சிலையை விற்க முயன்றவர்கள் கைது
-பதுளை நிருபர்-
80 லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான புத்தர் சிலையுடன் நேற்று திங்கட்கிழமை மாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலை ஒன்று விற்பனைக்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருப்பதாக கந்தகெடிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி புத்திகவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசநாயகவின் ஆலோசனைக்கு அமைய, கந்தகெடிய பொலிஸ் நிலையத்தில் இரண்டு அதிகாரிகள் சிலையை கொள்வனவு செய்யும் நபர்கள் போல் வேடத்துடன் குறித்த வீட்டுக்கு சென்று சிலையை பரிசோதிக்க வேண்டும் என கூறிய போது, சந்தேக நபர்களினால் சிலை மாறுவேடம் பூண்ட பொலிஸாரிடம் கொடுக்கப்பட்டது.
இதன்போது, மேலும் சில பொலிஸ் குழுவினர்கள் குறித்த வீட்டினை சுற்றி வளைத்து சிலையை கைப்பற்றியதோடு, 46,41,26 வயதுகளையுடைய மூவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சிலை மிகவும் பழைமை வாய்ந்தது எனவும், 80 லட்சம் ரூபாவுக்கு குறித்த சிலையை விற்பனை செய்வதற்காக பேரம் பேசியதாகவும் கந்தகெடிய பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் இன்று பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெடிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கந்தகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.