போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

-கல்முனை நிருபர்-
ஹெரோயின்  போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த   சந்தேக நபரை   எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம்  கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனை மதிரஸா   வீதியில்   வைத்து  கைதான சந்தேக நபர் தொடர்பிலான வழக்கு  இன்று  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மேற்குறித்த உத்தரவை நீதிவான் பிறப்பித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த  வெள்ளிக்கிழமை  அதிகாலை 2.30   மணியளவில் கல்முனை தலைமையக    பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனை மதிரஸா   வீதியில்   வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் கல்முனைகுடி பகுதியை சேர்ந்த   34 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து ஹெரோயின்  போதைப்பொருள் 7 கிராம் 870 மில்லிகிராம் உட்பட  சந்தேக நபர்  பாவித்த கைத்தொலைபேசி  என்பன  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில்   உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க  உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான  திசாநாயக்க (53534) கண்டப்பகல (75492) பொலிஸ் கன்டபிள்களான பெரேரா  (71664) அபேரட்ன (75812) நிமேஸ்(90699) சாரதி ஜெயரட்ன (19786) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர்கள்  சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக   பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.