உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் உத்தரப்பிரதேசம் – ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிற, தாஜ்மஹாலின் அழகை இரசிக்க இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில், தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.
இதைத் தொடர்ந்து தாஜ்மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில், வெடி குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்