கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம் : ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட மக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக 50 ஆவது நாளையோட்டி , கல்முனையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்று கிழமை முன்னெடுக்கப்பட்டது .

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 50 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சேனைகுடியிருப்பு கணேசமாக வித்தியாலயத்தின் முன்றில் காலை 8.30 மணி அளவில் ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கல்முனை பிரதான வீதி வழியாக 3 கிலோமீற்றர் தூரம் கடுமையான வெயிலுக்கு மத்தியில் சிறுவர்கள், பெண்கள் வயோதிபர்கள், இளைஞர்கள் என 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நடைபவணியாக கல்முனை வடக்கு பிரதேசத்திற்கு வந்தடைந்தனர்.

கடந்த காலங்களில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவாக செயல்பட்டு வந்த கல்முனை வடக்கு பிரதேச செயலகம், 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வந்ததாக குறித்த மக்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும், திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேசத்தின் கீழ் வருகின்ற சிவில் சமூக அமைப்புக்கள், பொது மக்கள் மற்றும் அக்கறையுடைய தரப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்