-நானுஓயா நிருபர்-
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் .
கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்வதற்கு கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்திருந்தனர்.
இவர்கள் இன்று திங்கட்கிழமை மீண்டும் கொழும்பு நோக்கி செல்வதற்காக போதிய அளவில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நுவரெலியா மத்திய பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட நேரம் தூர சேவை பேருந்துகள் இன்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அத்துடன் ஒரே நேரத்தில் அதிக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பேருந்து நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது .
இது குறித்து பயணிகள் கூறுகையில்,
ஒரே நேரத்தில் இவ்வாறு அதிக பயணிகள் பயணம் மேற்கொள்ளும் காலங்களில் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் காலத்தில் பயணிகள் நலன் கருதி புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக தெரிவித்த போதிலும் போதிய அளவு பஸ்கள் இல்லாததன் காரணமாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சிறு பிள்ளைகளுடன் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து போதிய அளவில் இல்லாமையால் ஒரு சிலர் மீண்டும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பயணிகள் குற்றம் சுமத்துக்கின்றனர்.