இந்தியாவில் 17 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று தலைமறைவாகியுள்ள 22 வயது யுவதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனே இதன் போது காணாமல்போயுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தனியார் காலணி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பணிபுரிந்து வரும் நிலையில் குறித்த சிறுவனுடன் இவர் கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
மேலும் அந்த சிறுவனிடம் காதலிப்பதாக கூறி வந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன், இளம்பெண், சிறுவனை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றதையடுத்து இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து இரு வீட்டாரும் விசாரித்தபோது, ஆசை வார்த்தைக் கூறி சிறுவனை அழைத்து சென்ற இளம்பெண் குடியாத்தம் அருகில் உள்ள சிந்தகணவாய் முனீஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதேவேளை இளம்பெண் இன்னும் சிறுவனுடன் தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.