கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை உணவு உட்கொண்ட மாணவிகள் சிலருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, 16 மாணவிகள் அவசரமாக கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட காலை உணவின் போது, சுமார் 150 மாணவிகளுக்கு அன்னாசிப்பழம் வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
அதனை உட்கொண்ட பின்னர், 16 மாணவிகளின் உடலில் திடீரென ஒருவகை அரிப்பு மற்றும் ஒவ்வாமை (Allergy) ஏற்பட்டுள்ளது.
நிலைமையை உணர்ந்த பாடசாலை நிர்வாகம், உடனடியாகச் செயற்பட்டு அவசரப் பிரிவு ஆம்புலன்ஸ் (1990 Suwa Seriya) சேவைக்குத் தகவல் வழங்கியுள்ளது.
அதற்கமைய, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் தகுந்த மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.