திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றிலிருந்து, முதியவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் நாகராசா (வயது 89) என தெரியவருகிறது.
வெருகல் ஆலய வளாகத்தில் சில நாட்களாக இவர் தங்கி நின்றதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இவர் வெருகல் ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்றபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சடலத்தின் அருகிலுள்ள ஆற்றுக் கரைப் பகுதியிலிந்து பாதணி,டோச்லைட், தண்ணீர் கேண் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா வருகை தந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.