ஹட்டன் பொது சந்தை வளாகத்தில் நடைபாதையை மறித்து, அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டு வியாபாரம் செய்த கடைகளை அகற்றுவதற்கு முற்பட்ட போது, ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் டிக்கோயா நகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள ஹட்டன் பொது சந்தை வளாகத்தில், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகளுக்கு வெளியே தட்டுகளை அமைத்து வியாபாரம் செய்த வர்த்தகர்களின் புதிய கட்டுமானங்களை அகற்றுவதற்கு முற்பட்ட போதே, இன்று (20) திங்கட்கிழமை ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் இந்த பதற்றமான சூழல்ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் டிக்கோயா நகர சபையின் வருமானக் நிர்வாகி உள்ளிட்ட அதிகாரிகள், இந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுமாறு குறித்த வர்த்தகர்களுக்கு இதற்கு முன்னர் அறிவித்திருந்தனர்.
எனினும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது நடைபாதையை மறித்து வியாபாரம் செய்தமையினால், ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் இன்று அந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றி வந்த வேளையில், பொது சந்தை வர்த்தகர்கள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு, அந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நகரம் முழுவதிலும் உள்ள இவ்வாறான அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுமாறும், ஒரு குறிப்பிட்ட வர்த்தகப் பிரிவினரை மாத்திரம் இலக்கு வைத்து அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவது நியாயமற்றது என்றும் அந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொது சந்தை வளாகத்தில் சில வர்த்தகர்கள் மற்றும் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் சில கடைகளில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியுள்ளனர்.