இலங்கை – பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் அந்நாட்டு மாணவ இயக்கங்கள், எதிர்கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மக்கள் திரண்டு கிளர்ச்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அதன்போது அதிகளவான கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசாங்கத்தினால் கொல்லப்பட்டனர். இதனால் உக்கிரமடைந்த கிளர்ச்சியால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான 45 பேர் இந்தியாவுக்கு தப்பி சென்றனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அவர்களை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருந்தபோதிலும் தப்பிச்சென்ற அவர்களை இந்தியா அடைக்கலம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. அதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் ஷேக் ஹசீனாவையும், இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளோர்களையும் உடனடியாக பங்களாதேசுக்கு திருப்பியனுப்ப கோரியே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜரொன்றையும் கையளித்தனர்.