வைத்தியரும் இல்லை பணியாளர்களும் இல்லை : திறந்து கிடந்த வைத்தியசாலை கதவுகளை பூட்டி பாதுகாத்த அயலவர்கள்

-கிளிநொச்சி நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மருத்துவரும் இல்லாத நிலையில், நோயாளர் காவு வண்டியும் இல்லாத நிலையில் அவசரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டிய நோயாளி ஒருவர் ஒரு மணித்தியாலத்தின் பின் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இருந்து திடீரென நோய்வாய்ப்பட்ட ஒருவரை குறித்த அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அங்கு மருத்துவர் கடமையில் இல்லை.

இதேவேளை குறித்த மருத்துவமனை நோயாளர் காவு வண்டியும் இல்லாத நிலையில், ஒரு மணித்தியாலம் காத்திருந்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு மருத்துவர்களுக்கான ஆளணி வெற்றிடம் இருக்கின்ற போதும் தற்போது ஒரு பெண் மருத்துவ அதிகாரி மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மருத்துவர் சனி, ஞாயிறு தவிர்ந்த நாட்கள் காலை 9:00 மணியிலிருந்து 4:00 மணிவரையே கடமையில் ஈடுபடுவதாகவும், மருத்துவரது கடமை நேரத்திற்கு முன்னரும், பின்னரும் சிகிச்சை பெறுவதற்க்காக செல்பவர்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே வேளை, அம்பன் ஆதார வைத்தியசாலையில் நீண்டகாலமாக மருத்துவர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்வதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மருத்துவர்கள் இல்லாது மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாவட்ட பிராந்திய சுகாதார தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,

பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மருத்துவமனையில் நோயாளர் காவு வண்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தம் செய்வதற்கான நிதி இன்மை காரணமாக வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு 24 மணிநேரமும் கடமையில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான விடுதிவசதி செய்யப்பட்டும், குறித்த மருத்துவர் ஒருநாள் கூட அங்கு தங்கியிருந்து பணியாற்றுவதில்லை எனவும், குறித்த மருத்துவ மனை திறம்பட செயற்பட ஆவன செய்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது விடயமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட துறை சார் அதிகாரிகளுடன் பல தடவைகள் பேசியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கிறனர்.

நேற்று குறித்த சம்பவம் இடம் பெற்றவேளை, மருத்துவ மனையில் கடமையிலிருந்த ஒரே பணியாளரும் நோயாளர் காவு வண்டியில் சென்றுவிட்ட நிலையில், அயலில் உள்ளவர்கள் மருத்துவமனையில் திறந்திருந்த கதவுகளை பூட்டி 6:30 மணிக்கு பின்னர் கடமைக்கு வந்த பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக ஆர்வலர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.