-பதுளை நிருபர்-
பதுளை மாவட்டத்தில் 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவர், தனது ஆதரவாளர்களுக்காக பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தை பதுளை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடைநிறுத்தியுள்ளது.
பெருந்தோட்ட தொழிற்சங்கம் ஒன்றின் பொது செயலாளரான குறித்த வேட்பாளர் தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்கிய பின்னர், தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பதுளை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகளுக்குத் இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலுக்கு அமைய தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகளும், பண்டாரவளை பொலிஸாரும் இணைந்து ஹோட்டலுக்குச் சென்று குறித்த கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் உணவுகள் அனைத்தையும் பண்டாரவளையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றுக்கு வழங்க ஹோட்டல் உரிமையாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த வேட்பாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு ஆதரவாளர்களும் யாரும் வரவில்லை எனவும் குறித்த கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.