இலங்கையில் இவ்வருடம் இரு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணியை முதன்மைப்படுத்துமாறும், அதன் பின்னர், சேதமடைந்த சொத்துக்களைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் நிதி தேவைப்படுமாயின் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
இவ்வருடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த சொத்துக்கள் புனரமைக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.