உலகில் முதல் முறையாக விண்கலத்தின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக தரையிறக்கி எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் அதற்காக அந்த விண்கலத்தை தொடர்ந்து சோதித்து வருகிறது.
இதன்படி விண்வெளிக்கு அனுப்பிவிட்டு பூமிக்கு கொண்டு வந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு முறை நடத்தப்பட்ட சோதனைகளின் போது விண்கலத்தின் இரண்டாம் நிலையான பூஸ்டர் பூமியில் தரையிறங்குவதற்கு முன்பே நடுவானில் வெடித்து சிதறியது.
இந்தநிலையில், ஸ்டார்ஷிப் விண்கலத்தின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக குறித்த விண்கலம் சோதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஆட்கள் யாரும் இன்றி வெற்று விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சற்று நேரத்துக்கு பிறகு விண்கலம் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி செங்குத்தாக கீழே இறங்க தொடங்கிய நிலையில் எப்படி புறப்பட்டு சென்றதோ அதுபோலவே நெருப்பை கக்கியபடி மெல்ல மெல்ல கீழே இறங்கியுள்ளது.
இறுதியில் விண்கலம் செலுத்தும் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த உலோக கரங்கள் பூஸ்டர் பகுதியை பிடித்தது அதாவது, புவி ஈர்ப்பு விசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கே விண்கலம் திரும்பியது.
இதன் மூலம் உலகில் முதல் முறையாக விண்கலத்தின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினர் கொண்டாடி மகிழ்ந்ததுடன் எலான் மஸ்க்கும் இதன் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.