-பதுளை நிருபர்-
வெளிமடை ஹம்பகஸ் தோவ பிரதான வீதியில் இடமஹந்தி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை பயணித்த கார் எதிரே வந்த பொரலோ லொறி ஒன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து வெளிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுள் காரில் பயணித்த பெண்கள் இருவரும் ஆண்கள் இருவர் எனவும் குறித்த நால்வரும் மேற்குறிப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நால்வரும் மங்கள நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த வேளை அதில் ஒருவருக்கு சுகயீனமுற்றதாகவும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நால்வரும் வெளிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் அம்பகஸ்தோவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் அம்பகஸ்தோவ போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.