-யாழ் நிருபர்-
எழுநாவின் ஏற்பாட்டில் காவேரிக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் விவசாயபீடத்தின் சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஆதரவுடன் கலாநிதி S.J அரசகேசரியின் வடக்கு-கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் என்ற நூலின் வெளியீட்டு விழாவானது கடந்த வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் விவசாயபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் தலைமை உரையினை விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் அவர்கள் வழங்க அணிந்துரையினை கிளிநொச்சி மாவட்ட முன்னைநாள் அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதிஸ்வரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக நூல் வெளியீடு இடம்பெற்றது.
நூலின் முதற்பிரதியினை எழுத்தாளரின் சகோதரி திருமதி பூவையற்கரசி சுந்தரலிங்கம் அவர்கள் பெற சிறப்புப்பிரதிகளை அங்கிருந்த விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை காவேரிக்கலாமன்றத்தின் இயக்குனர் வண.பிதா வ.ஜோசுவா அவர்கள் ஆற்றியிருந்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ‘உயிர்ப்பல்வகைமையில் நிலைபேறான அபிவிருத்தியின் சாதக பாதக விளைவுகளை விளங்கிய நிலைபேறான இந்நூல் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. இந்நூலின் இரண்டாவது பாகத்தினை பெரிதும் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
மதிப்பீட்டு உரையினை தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய உரையினை இரணைமடு விவசாய சம்மேளனங்களின் தலைவர் திரு.சிவமோகன் அவர்கள் ஆற்றியிருந்தார். ஏற்புரையினை நூலாசிரியர் கலாநிதி S.J அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்விற்கு பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், JICA திட்ட அலுவலர் , விவசாய திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இறுதி நிகழ்வான நன்றியுரையினை விவசாயபீடத்தின் பண்ணை முகாமையாளர் திரு.சிறிதரன் நிகழ்த்த விழா இனிதே நிறைவடைந்தது.


