2022ஆம் ஆண்டு அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது, இடம்பெற்ற வன்முறைகளை, அரசியல் ஆதாயத்திற்காக காணொளியாக பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனைகள் மற்றும் 2022 மே 9ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காட்சிகள், பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் மீளப் பரப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளிகள், கடந்த கால நிகழ்வுகளை நடப்பு நிகழ்வுகளாக காட்டி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இதுபோன்ற காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இந்த காணொளிகளை பகிருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.