அடுத்த வருடத்தின் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தங்காலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துணிச்சல் மிக்கவர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு எங்களது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
மிகக் குறுகிய காலத்திற்குள், நாட்டுக்கு சாதகமான நம்பகமான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம்.
மூன்று அமைச்சர்களை கொண்டமைந்த ஒரு அரசாங்கத்தை நிறுவி, அன்றாட நடவடிக்கைகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்கின்றோம்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இடைக்கால பாதீடும், பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் முழுமையான பாதீட்டையும் முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதன அதிகரிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
வறிய மற்றும் விசேட தேவையுடைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையையும் அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.